இராணுவமயமாக்கலைக் குறைத்து, சிறிலங்கா அரசு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தாதவிடத்து, பேச்சுவார்த்தையை அர்த்தம் அற்றது
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை பேச்சுவார்த்தை தொடர்பாக மதத்தலைவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மாணவர்களின் நிலைப்பாடு.
“தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும்.”— மதத்தலைவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மாணவர்களின் நிலைப்பாடு.
JAFFNA, SRI LANKA, January 5, 2023/ EINPresswire.com / -- இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தமது தாயகமாகக் கொண்டு வாழும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தை தமிழ் அரசியல் தரப்பினருக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுவதை அறிகின்றோம். எமது அரசியல் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக மிகப்பெரும் விலைகளைக் கொடுத்து நிற்கும் எமது இனத்தின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் பாரிய அளவிலான வரலாற்றுப் பொறுப்பு உள்ளது என்பதுடன் அப்பொறுப்பினை அவர்கள் சரியான முறையில் கையாளுவார்கள் என்று நம்புகின்றோம்.
அத்தகைய நம்பிக்கையுடன், பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள தமிழ்த்தரப்பினரின் பிரதிநிதிகள், எங்களுடைய நிலைப்பாட்டை வலுவாக முன்வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
1) எந்தவொரு உத்தியோகபூர்வமான பேச்சுக்களும் ஆரம்பிக்க முன்னர், வடகிழக்கில் இராணுவ பலத்தை தற்போதைய மட்டத்தின் 25 வீதத்தால் ஆவது குறைத்து, தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உரிய சட்டபூர்வமான உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதன் மூலம் சிறிலங்கா அரசானது தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். எந்த உடன்பாடும் எட்டப்படுவதற்கு முன், வடகிழக்கின் இராணுவ எண்ணிக்கை 1983க்கு முந்தைய நிலைக்குக் குறைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் உடனடி பிரச்சனையான இராணுவமயமாக்கலைக் குறைத்து சிறிலங்கா அரசு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தாதவிடத்து, பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது அர்த்தம் அற்றது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
2) தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும். இதில் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும்.
இவ்வடிப்படையிலேயே எந்த ஒரு முன்னெடுப்புக்களும் மேற்கோள்ளப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம்.
நன்றி.
1) ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், நல்லை ஆதீனம் – யாழ்ப்பாணம்.
2) வண. பிதா. ஜோசப் மேரி (S J)
மட்டக்களப்பு.
3) திரு.அ.விஜயகுமார்,
தலைவர் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
மாணவர் ஒன்றியம்.
4) திரு.நி.தர்சன்
தலைவர் - கிழக்கு பல்கலைக்கழக
மாணவர் ஒன்றியம் - கலை, கலாசார பீடம்.
5) திருமதி யோ. கனகரஞ்சினி
தலைவர் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவுகளின் சங்கம் - வடக்கு கிழக்கு மாகாணங்கள்.
6) தவத்திரு அகத்தியர் அடிகளார்
தென்கயிலை ஆதீனம் - திருகோணமலை .
7) வண. பிதா. கந்தையா ஜெகதாஸ்
மட்டக்களப்பு.
8) தவத்திரு வேலன் சுவாமிகள்
சிவகுரு ஆதீனம் – யாழ்ப்பாணம்.
9) வண. பிதா. செபமாலை பிரின்சன்
மட்டக்களப்பு.
10) வண. பிதா. ரொபேர்ட் சசிகரன்
யாழ்ப்பாணம்.
11) திரு.ம.கோமகன்
அமைப்பாளர் - குரலற்றவர்களின் குரல்.
Lanka News
LN
email us here